தஞ்சாவூர், மார்ச் 7: காசவளநாடு கோவிலூர் ஜெம்புகேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். தஞ்சாவூர் அருகே காசவளநாடு கோவிலூரில் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் 20 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இதற்காக தமிழக அரசு ரூ.62 லட்சம் நிதி திருப்பணிக்கு ஒதுக்கீடு செய்தது. மேலும் உபயதாரர்கள் மூலம் திருப்பணிகள் நடைபெற்றது. இதில் ராஜகோபுரம், மூலவர் கோபுரம் மற்றும் அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், தெட்சிணாமூர்த்தி, கஜலட்சுமி, சண்டீகேஸ்வரர் ஆகிய பரிவார தெய்வங்களின் சன்னதிகளின் கோபுரங்களும் திருப்பணிகள் செய்யப்பட்டது.
இப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து கடந்த மார்ச் 1 ம் தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது. இதையடுத்து நேற்று முன்தினம் திருச்சி திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் ஆலயத்திலிருந்தும், காவிரி ஆற்றிலிருந்தும் புனித நீர் எடுத்து வரப்பட்டது. நேற்று மாலை கோவிலூர் கல்லணைக் கால்வாய் ஆற்றிலிருந்தும் புனித நீர் அடங்கிய கடம் ஊர்வலம் புறப்பட்டது.
இதில் யானை, குதிரை, பெண்களின் கோலாட்டம், தாரை தப்பாட்டம், கொம்பு, சிவவாத்திய கணங்கள், மங்கள வாத்தியங்கள், வாணவேடிக்கையுடன் 18 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.பின்னர் கோயில் எதிரே உள்ள அமைக்கப்பட்ட பிரமாண்டமான யாகசாலை மண்டபத்தில் நேற்று மாலை சிறப்பு பூஜைகளுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
இன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, பின்னர் காலை 11 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று மாலை முதல் நாளை வரை திருமுறைகளை காசவளநாடு நமச்சிவாய அருள்நெறி சபையினர் பாடி வருகின்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் காசவளநாட்டினர் செய்து வருகின்றனர்.