Saturday, July 27, 2024
Home » இயற்கை வேகங்களை அடக்காதே!

இயற்கை வேகங்களை அடக்காதே!

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர் மித வேகம் மிக நன்று… அதி வேகம் ஆபத்து! இதுபோன்ற வாக்கியங்களை சாலையோரங்களில் பார்த்திருப்போம். இது வாகனங்களில் செல்லும்போது பின்பற்ற வேண்டிய வேகக் கட்டுப்பாடுகளை குறிக்கிறது. கட்டாயம் அதனை பின்பற்றுவது நமது தலையாய கடமை.; அதேபோல் உடலின் செயல் இயக்கங்களாலும், மனதாலும் உடலிலிருந்து வெளியேற தயாராக இருப்பதை இயற்கை வேகம் என்கிறது ஆயுர்வேதம். இதை அடக்கக்கூடிய இயற்கை வேகம், அடக்கக்கூடாத இயற்கை வேகம் என்று ஆயுர்வேதம் இரண்டாக பிரித்துள்ளது என்ற ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன் இதுகுறித்து மேலும் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.அடக்கக்கூடிய இயற்கை வேகம் என்பது கோபம், ஆசை, பொறாமை, காமம் போன்றவற்றைக் குறிக்கிறது. இவற்றை மனக் கட்டுப்பாட்டுடன் கட்டாயம் அடக்கிக் கையாள வேண்டும். அடக்கக்கூடாத இயற்கை வேகம்உடல் செயல் இயக்கத்தால் பின்வரும் இயற்கை வேகங்களை எக்காரணத்தைக் கொண்டும் அடக்கக் கூடாது. நடைமுறையில் ஆண்- பெண் இருபாலரும் வேலை, கூச்சம், இட வசதியின்மை காரணமாக உடல் செயல் இயக்கங்களால் வெளிவரும் இயற்கை வேகங்களை அடக்கும் வழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் இயற்கை வேகங்களை அதிகம் அடக்குபவர்களாக இருக்கிறார்கள். ஆண்களாக இருப்பினும், பெண்களாக இருப்பினும் எக்காலத்திலும், எந்நேரத்திலும் இயற்கை வேகங்களை அடக்கக்கூடாது. அந்த அடக்கக்கூடாத இயற்கை வேகங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.வாயு, மலம், சிறுநீர், தும்மல், தண்ணீர் தாகம், தூக்கம், இருமல், சிரமத்தால் ஏற்படும் மூச்சிரைப்பு, கொட்டாவி, கண்ணீர், வாந்தி, விந்து, பசி, ஏப்பம் ஆகியவையே அந்த இயற்கை வேகங்கள். ஒவ்வொரு அடக்கக்கூடாத வேகங்களை அடக்கும் போது அதன் வேகத்திற்கு ஏற்ப அறிகுறிகள் தென்படும். மேற்குறிப்பிட்ட 14 இயற்கை வேகங்களை அடக்கினாலோ அல்லது ஒன்றிரண்டு வேகங்களை அடக்கினாலோ அதிகம் பாதிக்கப்படக் கூடிய உறுப்பு இதயம் என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் உண்மை. உடல் செயலுக்கு காரணம், வாதம் என்ற வாயுதான். 5 விதமான வாயுவில் உடலிலிருந்து வெளியேறும் வேகத்திற்கு காரணமாக இருப்பவை வியாணன் என்ற வாதம். இதனுடைய அமைவிடம் இதயம். அதனால்தான் இயற்கை வேகங்களை அடக்கினால் இதயம் பாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு இயற்கை வேகத்தையும் அடக்கும்போது பின்வரும் அறிகுறிகள் ஏற்படுகிறது. * வாயுவை அடக்குவதால் வயிற்றுப் பொருமல், வாயு தொந்தரவு, வயிற்று வலி, சீறுநீர், மலம் வெளியேறுவதில் சிக்கல், அஜீரணம், இதய நோய் போன்றவை ஏற்படுகிறது.* மலத்தை அடக்குவதால் தலை வலி, சைனஸ், கணுக்கால் கெண்டச் சதையில் வலி, அதிக ஏப்பம், இதயத்தில் வலி, ஆசனவாயில் பிளப்பது போன்ற வலி, மூலம் போன்றவை ஏற்படுகிறது. * சிறுநீரை அடக்குவதால் சிறுநீரகக்கல் உருவாகுதல், மூத்திரப்பை, அடிவயிறு, பிறப்புறுப்பில் வலி, சிறுநீர் கழிக்கையில் சிரமம் போன்றவை ஏற்படுகிறது. * ஏப்பத்தை அடக்குவதால் ருசியின்மை, உடலில் நடுக்கம், இதயத்தை அடைப்பது போன்ற உணர்வு, இருமல், விக்கல் போன்றவை ஏற்படுகிறது. விக்கலை அடக்கினால், ஏப்பத்தை அடக்கினால் தென்படும் அறிகுறிகளே வெளிப்படுகிறது. * தும்மலை அடக்குவதால் தலை வலி, முக வாதம், கண், காது, மூக்கு, வாய், தோல் போன்ற ஐம்புலன்களும் பாதிக்கப்படுகிறது. * தண்ணீர் தாகம் ஏற்படும்போது அதை அலட்சியப்படுத்தினால் உடல் பலவீனம், இளைப்பு, காது கேளாமை, தலைச்சுற்றல், இதயத்தில் வலி போன்றவை ஏற்படுகிறது.* பசியை அடக்குவதால் உடல் வலி, பசியின்மை, ருசியின்மை, உடல் இளைப்பு, வயிற்று வலி, தலைச்சுற்றல் போன்றவை ஏற்படுகிறது. *தூக்கத்தை அடக்குவதால் தலை மற்றும் கண்ணில் பாரம், தொடர் கொட்டாவி, உடல் வலி போன்றவை ஏற்படுகிறது. * இருமலை அடக்குவதால் இருமலின் தாக்கம் அதிகமாகுதல், மூச்சிரைப்பு, ருசியின்மை, இதய நோய், உடல் இளைப்பு போன்றவை ஏற்படுகிறது. * சிரமத்தால் ஏற்படும் மூச்சிரைப்பினை அடக்குவதால் வயிற்று வலி, இதய நோய், மயக்கம் போன்றவை ஏற்படுகிறது. * கொட்டாவியை அடக்குவதால் தலைவலி, கழுத்து பிடிப்பு போன்றவை ஏற்படுகிறது.* கண்ணீரை அடக்குவதால் சைனஸ் பிரச்னை, தலை, கண், இதயம், கழுத்து போன்ற இடங்களில் வலி, அஜீரணம், தலைச் சுற்றல், வயிற்று வலி, பொருமல் போன்றவை ஏற்படுகிறது. * வாந்தியை அடக்குவதால் அக்கி, சரும நோய், கண்ணில் உறுத்தல், இருமல், மூச்சியிளைப்பு, கொமட்டல், முகத்தில் கரும்புள்ளி போன்றவை ஏற்படுகிறது.* விந்துவை அடக்குவதால் விதைப்பை வீக்கம், காய்ச்சல், இதயத்தில் வலி, சிறுநீர் கழிப்பதில் சிரமம், ஆண் உறுப்பில் வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும். மேற்கண்ட இயற்கை வேகங்களை அடக்குவதால் இதயம் சம்பந்தமான அறிகுறிகளே அதிகம் வெளிப்படுகிறது.ஆதலால், இதயம் காக்க இயற்கை வேகங்களை எக்காரணத்தைக் கொண்டும் அடக்கக்கூடாது. அப்படி அடக்கினால் ஏற்படும் நோய்களை சரி செய்ய, அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்வது அவசியம். அதற்கு உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.; ;– க.கதிரவன்

You may also like

Leave a Comment

two × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi