அரியலூர், மார்ச் 5: அரியலூர் நகராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக்கடையை மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா, நேற்று திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் அரியலூர் நகராட்சியில், அரியலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை சார்பில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட அமராவதி நியாய விலை கடை – II கட்டிடத்தினை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா திறந்து வைத்து, முதல் விற்பனையை கலெக்டர் மற்றும் அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த புதிய நியாய விலைக்கடையின் மூலம் 1401 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுகின்றனர்.
நிகழ்ச்சியில் அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், நகர்மன்றத் துணைத் தலைவர் கலியமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், திமுக நகரக் கழகச் செயலாளர் முருகேசன், மதிமுக ஒன்றிய செயலாளர் சங்கர், திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் அருண் ராஜா , திமுக மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் குணா, திமுக மாவட்ட அயிலக அணி துணைத் தலைவர் எழில்மாறன், திமுக நிர்வாகிகள் பரமேஸ்வரன், சந்திரசேகர், அரியலூர் தாசில்தார் ஆனந்த வேலு, நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, நகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.