உசிலம்பட்டி,ஏப்.11: உசிலம்பட்டி பகுதியில் முறையான சாலை, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உசிலம்பட்டி நகராட்சி 5வது வார்டு இருளப்பத்தேவர் தெருவில் 100க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலைகள் சேதமடைந்த நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த பகுதியில் சாலை வசதி, கழிவுநீர் வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர கோரி பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
அடிப்படை வசதி செய்து கொடுக்க மக்கள் கோரிக்கை
previous post