சின்னசேலம், ஜூன் 5: சின்னசேலம் அருகே பெரியசெருவத்தூர் காட்டுகொட்டாயை சேர்ந்த சின்னதம்பி மகன் திருநாவுக்கரசு(24). இவருக்கும் கடலூர் மாவட்டம் கோணாங்குப்பத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் மகள் மகாலட்சுமி(20) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு முனுஷ்னி என்ற 9 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் திருநாவுக்கரசு கடந்த சில மாதங்களாக சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இதனால் மகாலட்சுமி மாமனார், மாமியாருடன் பெரியசெருவத்தூரில் வசித்து வந்தார். இந்நிலையில் மகாலட்சுமி இரவு 1 மணியளவில் சேலையில் தூக்குபோட்டு இறந்துவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து ராஜமாணிக்கம் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.