ஓசூர், பிப்.13: ஓசூர் அருகேயுள்ள பாகலூர், தமிழக-கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ளது. இந்த நகரை சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. தனியார் பள்ளி, கல்லூரிகளும் அமைந்துள்ளன. ஓசூரிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு செல்ல, பாகலூர் வழியாக சர்ஜாபூர் சாலையில் செல்லும் பொதுமக்களின் வாகனங்கள் அடிக்கடி வாகன நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். அதே போல், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகளும் பாதிக்கப்பட்டனர். இதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். அதன் பேரில் தேசிய நெடுஞ்சாலை துறை மூலம், புறவழிச்சாலை புதியதாக அமைக்கப்படுகிறது.
இது ஒசூர் அருகே பாகலூர் நகரத்தை இணைக்கும் புறவழிச்சாலையாக அமைக்கப்படுகிறது. இந்த சாலை ₹47 கோடி மதிப்பில் அமைகிறது. இந்த சாலை 150 அடி அகலத்தில், 4.5 கி.மீ நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது.
இதற்காக கொத்தப்பள்ளி, கொடியாளம், ஈச்சங்கூர் வரை சாலையில் உள்ள மரம், செடிகளை அகற்றி சாலையை சமன்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணிகளை கிருஷ்ணகிரி உதவி கோட்ட பொறியாளர் சவுந்தர் ராசன், ஓசூர் உதவி பொறியாளர் நிவேதா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.