கோவை, ஏப் 17: கோவை மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் 65 சதவீதத்துக்கு கீழ் வாக்குப்பதிவான கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 213 வாக்குச்சாவடிகளை சேர்ந்த பொதுமக்களிடம் கலெக்டர் கிராந்திகுமார் பாடி வழிகாட்டுதலின் பேரில், 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் திருவிழா அழைப்பிதழ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக நேற்று கணியூர், ஊஞ்சபாளையத்தில் நூறு சதவீதம் வாக்களிப்பது வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.
மேலும், ஒண்டிப்புதூரில் உள்ள ஆர்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் விளம்பர பதாகைகளை ஏந்திசென்று விழிப்புணர்வு பேரணி நடத்தினர். கவுண்டம்பாளையம், துடியலூர் சந்தையில் பொதுமக்களிடம் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. தொண்டாமுத்தூர் பகுதியில் குறைவாக வாக்குப்பதிவான பகுதிகளில் விழிப்புணர்வு சுவரொட்டிகள் வீடுகளில் ஒட்டப்பட்டன.