தேனி, ஏப். 16: தேனி பழைய பஸ்நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பயணிகள் நிழற்குடையை மாற்றி அமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். தேனி நகர் பழைய பஸ்நிலையம் தேனி நகர் கம்பம்சாலை, மதுரை சாலை சந்திப்பில் உள்ளது. இப்பஸ்நிலையத்தில் இருந்து போடி, குமுளி பகுதிகளில் இருந்து தேனி, மதுரை, திருச்சி என பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் வந்து செல்கின்றன. இதனால், இப்பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.
பஸ்நிலையம் அருகே ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்காக கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக பழைய பஸ் நிலையத்திற்குள் இருந்த பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டது. இதனால் பஸ்நிலையத்தில் பயணிகள் நிற்க நிழற்குடை இல்லாமல் போனது. தற்போது கோடைகாலம் துவங்கி கடும் வெயில் இருந்து வருவதால் பஸ்நிலையத்திற்கு வரும் பெண்கள், குழந்தைகள், முதியோர் நிழலுக்கு கூட ஒதுங்க முடியாத நிலையில் அவதியுற்று வந்தனர்.
இதனையடுத்து, போடி, கம்பம், குமுளி வழித்தடங்களில் செல்லக்கூடிய பயணிகள் நிற்பதற்கு ஏற்ப தற்காலிகமாக சிறிய அளவிலான மரக்கம்பிலான பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேற்கூரையாக தகர சீட்டுகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிழற்குடைக்குள் குறைவான பயணிகளே நிற்க முடிகிறது. மேலும் மழை நேரத்தில் இந்த நிழற்குடைக்குள் ஒதுங்கி நிற்காத முடியாத நிலை உள்ளது. இதனால் மரக் கம்புகளை மாற்றி இரும்பு கம்பிகளைக் கொண்டு அதிக பயணிகள் நிற்கும் வகையில் பெரிய நிழற்குடை அமைத்துத் தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.