திருவள்ளூர்:தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், பெரியகோட்டை கிராமத்தில் நில அளவை பணி மேற்கொண்ட நில அளவர் பவ்யாவை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவள்ளூர் மாவட்ட நில அளவை ஒன்றிப்பு சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் செந்தில்குமரன் தலைமை தாங்கினார். கோட்டச் செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் ஜோதி முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோட்ட பொருளாளர் நாராயணன், எஸ்வந்த் தாஸ், வேலாயுதம், குமரன், அரவிந்தன், சரத்குமார், மோகன்லால் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். அப்போது நில அளவர் பவ்யாவை தகாத வார்த்தைகளால் பேசி, கடுமையான தாக்குதல் நடத்திய ரவுடி முருகானந்தனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டது.
மேலும் நில அளவைத் துறையில் பணி செய்யும் பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது. எனவே உயிருக்கே உத்திரவாதம் இல்லாமல் உயிர் பயத்துடன் பணி செய்ய வேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே நில அளவைத் துறையினருக்கு பாதுகாப்பு அளிக்க தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.