திருச்சி, மார்ச் 29: திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் வரும் ஏப் 1ம் தேதி நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போட்டித் தேர்வுக்கான மாதிரித்தேர்வில் மாணவர்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட மைய நூலகம், என்.ஆர். ஐஏஎஸ் அகாடமி மற்றும் ரோட்டரி பீனிக்ஸ் இணைந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி IV (டிஎன்பிஎஸ்சி குரூப் IV) போட்டித் தேர்விற்கான மாதிரித்தேர்வு நடத்தப்பட உள்ளது.
தேர்வு ஏப்.1ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும். இந்த மாதிரி தேர்வில் முழு பாட பகுதிகளிலிருந்தும் வினாக்கள் இடம் பெறும். மாதிரி தேர்வை தொடர்ந்து பத்தாம் வகுப்பு தமிழ் திருப்புதல் (ரிவிசன்) வகுப்பு நடைபெறும். இவ்வகுப்பை என்.ஆர். ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் விஜயாலயன் நடத்தவுள்ளார்.
இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை. மாதிரி தேர்வில் மாணவர்களுக்கு வினாத்தொகுப்பு வழங்கப்பட்டு ஓ.எம்.ஆர். விடைத்தாளில் பதிலளிக்கும் முறையில் தேர்வு நடைபெறும். மாதிரி தேர்வு முடிந்தவுடன் ஒவ்வொருவரும் பெற்ற மதிப்பெண்கள் உடனடியாக தெரிவிக்கப்பட்டு குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு மதிப்பெண் அதிகப்படுத்துவதற்கு அறிவுரைகளும், வழிமுறைகளும் வழங்கப்படும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி-IV தேர்விற்கு தயார் செய்யும் மாணவ, மாணவிகள் இத்தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் தனலட்சுமி தெரிவித்துள்ளார்.