தாராபுரம், ஜூன் 17: கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை திமுக மற்றும் சார்பு அமைப்பினர் ஆண்டு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதன்படி தாராபுரத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் தொண்டரணி சார்பில் இன்று (17ம் தேதி) மாலை 3:30 மணியளவில் தாராபுரம்-உடுமலை சாலையில் உள்ள ரோட்டரி அரங்கில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. பங்கேற்று நலிவடைந்த ஏழை மக்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய பெட்டகங்கள், பெட்ஷீட், போர்வைகள், வீட்டுமனை பட்டாக்கள் உள்ளிட்டவை வழங்க உள்ளார். இந்த நிலையில் நேற்று விழா நடைபெறும் ரோட்டரி மஹால் மேடையை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மாநில மகளிர் தொண்டர் அணி செயலாளர் நாமக்கல் ராணி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.இதில் மாவட்ட மகளிர் அணி வலைதள பொறுப்பாளர் அமுதவல்லி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் சசிகலா, மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணைத்தலைவர் அருக்காணி மற்றும் நகர திமுக மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் உடன் வந்தனர்.