செய்யாறு, மார்ச் 7: தமிழகத்தில் சிறந்த பள்ளியாக செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விழாவில் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ₹10 லட்சம் மற்றும் கேடயம் பரிசாக வழங்கி கவுரவித்தார். பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நினைவை போற்றும் வகையில் சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் உள்ள கலையரங்கத்தில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜி.ஜெயகாந்தனிடம் நினைவு கேடயமும் பாராட்டு சான்றிதழும் மற்றும் பள்ளி பராமரிப்பு பணிக்காக ₹10 லட்சமும் வழங்கினார். சிறந்த பள்ளியாக தேர்வு செய்த தமிழக அரசுக்கும், தலைமை ஆசிரியருக்கும் பள்ளியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு மற்றும் பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழு ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.