சிட்னி: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. சிட்னியில் இன்று நியூசிலாந்து- இலங்கை அணிகள் விளையாடி வந்தனர். இந்த போட்டிக்கான டாசில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்த அணியின் பின் ஆலென் 1 ரன், கான்வே 1 ரன், கேப்டன் வில்லியம்சன் 8 ரன் என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து கிளென் பிலிப்ஸ் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் மிட்செல் 22 ரன்னுக்கும், அடுத்து வந்த நீஷம் 5 ரன்னுக்கும் ஆட்டம் இழந்தனர். மறுபுறம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிலிப்ஸ் அபாரமாக ஆடி சதம் அடித்தார். அந்த அணி தரப்பில் க்ளென் பிலிப்ஸ் 64 பந்துகளில் 104 ரன்கள் குவித்தார். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் அடித்தது. இலங்கை அணி தரப்பில் கசுன் ரஷிதா 2 விக்கெட்டும், தீக்ஷனா, டி சில்வா, ஹசரங்கா, லஹிரு குமாரா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. நியூசிலாந்து அணியின் பந்துவீசை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை அணி திணறி வந்தது. இலங்கை அணி 24 ரன்கள் எடுத்த நிலையில் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அந்த அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். அந்த அணியில் முதல் 4 ஆட்டக்காரகள் நிசாங்கா 0 ரன், குசல் மெண்டிஸ் 4 ரன், டி சில்வா 0 ரன், அசாலங்கா 4 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய கருணாரத்னே 3 ரன்னுக்கு அவுட் ஆனார். ராஜபக்சா மற்றும் ஷனகா ஆகியோர் சிறிது நேரம் ஆடினர். இதில் ராஜபக்சா 34 ரன்னுக்கும், ஷனகா 35 ரன்னுக்கும் ஆட்டம் இழந்தனர். இறுதியில் அந்த அணி 19.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆகி 65 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணி தரப்பில் பவுல்ட் 4 விக்கெட்டும், சாண்ட்னெர், இஷ் சோதி தலா 2 விக்கெட்டும், சவுதி, பெர்குசன் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி அரை இறுதிக்கான வாய்ப்பை பெற்றுள்ளது. தோல்வி அடைந்ததன் மூலம் இலங்கை அணியின் அரை இறுதி வாய்ப்பு கேள்விக் குறியாக உள்ளது….