ஈரோடு, ஜூன் 23: ஈரோடு மாவட்டம், கோபி, வடுகபாளையம் புதூர், ஜி.கே. நகரை சேர்ந்தவர் சிவமாலதி (27). இவரது கணவர் பாலகிருஷ்ணன் (39). இவர் சொந்தமாக கூட்ஸ் ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். மதுவுக்கு அடிமையான இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம். இந்நிலையில் நேற்று முன் தினம் மதியம் கடும் போதையில் இருந்த பாலகிருஷ்ணனை அவரது தந்தை ஆறுமுகம் கைத்தாங்கலாக வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
இதை கண்டு ஆத்திரமடைந்த மனைவி சிவமாலதி, படுக்கையறைக்குள் சென்று படுத்துகொண்டாராம். சுமார் 2 மணி நேரம் கழித்து அவர் மீண்டும் வெளியில் வந்து பார்த்தபோது, ஹாலில் உள்ள விட்டத்தில், பாலகிருஷ்ணன் சேலையால் தூக்கிட்டு தொங்கியுள்ளார். உடனடியாக அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே பாலகிருஷ்ணன் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து, கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.