நாகர்கோவில், ஆக. 8: உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி, கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று கொழு, கொழு குழந்தைகள் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் பகவதி பெருமாள், சமூக மருந்தியல்துறை தலைவர் டாக்டர் சுரேஷ்பாலன் தலைமை வகித்தனர். மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பிரின்ஸ் பயஸ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், உலக தாய்ப்பால் வார விழா கடந்த 1ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு பணிக்கு செல்லும் தாய்மார்கள் மத்தியில் குழந்தைகளுக்கான தாய்ப்பால் அவசியம் குறித்து மைய கருத்தாக வலியுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைக்கு தாய்ப்பாலை விட சிறந்த ஆரோக்கியமான உணவு எதுவும் இல்லை.
தாய்ப்பால் தான் குழந்தைக்கான முழு சக்தியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கிறது. நவ நாகரீக உலகில், சில பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதையே நிறுத்து கிறார்கள். தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. எனவே தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தைகள் வளர்ப்பில் அதிக அக்கறையுடன் செயல்பட வேண்டும். குழந்தைகளின் ஒவ்வொரு செயல் திறனையும் வைத்து அவர்களுக்கான நடவடிக்கைகளை தாய் கண்காணிக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் கண்காணிப்பாளர் டாக்டர் அருள்பிரகாஷ், உறைவிட மருத்துவர் டாக்டர் ஜோசப் சென், உதவி உறைவிட மருத்துவர்கள் டாக்டர்கள் விஜயலெட்சுமி, ரெனிமோள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.