வாலாஜாபாத்: ஏனாத்தூர் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் கஞ்சிபுரம் கலெக்டர் ஆய்வு செய்தார்.காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் ஏனாத்தூர் ஊராட்சியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மேலும், இங்கு ஒன்றிய பள்ளி, அங்கன்வாடி மையம், நூலகம், சமுதாயக்கூடம், விளையாட்டு திடல் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களும் உள்ளன. இந்த கட்டிடங்கள் மற்றும் வீடுகள் தற்போது சிதலமடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றன. இது குறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் சீரமைத்து தர கோரிக்கை வைத்திருந்தனர். அதன் அடிப்படையில் ரூ 1 கோடி மதிப்பிட்டில் வீடுகள் மற்றும் அரசு கட்டிடங்கள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியினை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஆய்வு நடத்தினார். அப்போது சாலைகள், அங்கன்வாடி மையம், ஒன்றிய பள்ளி, நூலகம், வீடுகள், நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணி அனைத்தையும் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து சமத்துவபுரத்தில் துவங்கப்பட்டுள்ள சமத்துவ நலக்குழு நிர்வாகிகளுடன் சமத்துவபுர வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும், அங்கு நடைபெற்று வரும் புனரமைப்பு அமைப்பு பணியினை விரைந்து முடிக்கவும் பணிகள் அனைத்தும் தரமானதாக உள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மாவட்ட திட்ட அலுவலர் ஸ்ரீதேவி, செயற்பொறியாளர் அருண்குமார், வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகநாதன், ராஜ்குமார், ஒன்றிய பொறியாளர் திருமலை, ஊராட்சி மன்ற தலைவர் வரதன் உட்பட ஒன்றிய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்….