அரவக்குறிச்சி, மார்ச்12:கரும்புகையை கக்கிக் கொண்டு சுற்றுச்சூழல் பாதிக்கும் வகையில் செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரவக்குறிச்சி நகரம் தாலுகா தலைமையிடமாக உள்ளது. இது கரூர், திண்டுக்கல், பழனி, பெள்ளாச்சி, தாராபுரம், கோவை போன்ற முக்கிய ஊர்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு இணைப்பு நகரகமாகவும் உள்ளது. இதனால் டூ வீலர்கள், கார், லாரிகள் உள்ளிட்ட பல்வேறு சரக்கு வாகனங்கள் ஏராளமாகச் சென்று வருகின்றன. இவ்வாறு செல்லும் ஏராளமான வாகனங்கள் சுற்றுச் சூழல் பாதிக்கும் வகையில் கரும் புகையை கக்கிக் கொண்டு செல்கின்றன. இதனால் ஊரின் சுற்றுச் சூழல் பாதிப்பது மட்டுமல்லாமல், சில சமயங்களில்
சாலையில் செல்லும் பொதுமக்கள் மூச்சு விடுவதற்கு திணறும் நிலை ஏற்படுகின்றது. தினமும் கரும் புகையை சுவாசிப்பதால் நுரையீரல்பாதிப்பு, ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சில நேரங்களில் அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு பின்னால்செல்லும் வாகனங்கள் பாதை தெரியாமல் தடுமாறுகின்றன. தற்பொழுது விற்பனைக்கு வரும் புதிய வாகணங்களில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பரிசோதனை செய்யப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட அளவு புகை வெளி வரும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
அதனால் பாதிப்பில்லாமல் உள்ளது. ஆனால் பழைய வாகனங்களில் சரியாக பராமரிக்கப்டாததால் கரும்புகையை வெளியிட்டபடிசாலையில் வருகின்றன. ஆகையால் அரவக்குறிச்சிபகுதியில் சுற்றுச் சூழல் பாதிக்கும் வகையில் கரும் புகையை கக்கிக் கொண்டு செல்லும் வாகனங்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.