புடாபெஸ்ட்: உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் 4 X 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தின் (ரிலே ரேஸ்) பைனலில் பங்கேற்க இந்திய அணி ஆசிய சாதனையுடன் தகுதி பெற்று அசத்தியது.தகுதிச் சுற்றில் களமிறங்கிய முகமது அனாஸ் யாஹியா, அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல் வரியதோடி, ராஜேஷ் ரமேஷ் ஆகியோரடங்கிய இந்திய அணி 2 நிமிடம், 59.05 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து 2வது இடம் பிடித்ததுடன் இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது. அபாரமாக செயல்பட்ட இந்திய அணி வீரர்கள் முந்தைய தேசிய சாதனை (3:00.25) மற்றும் ஆசிய சாதனையை (2:59.51) முறியடித்துள்ளனர். தகுதிச் சுற்றின் இதே பிரிவில் பங்கேற்ற அமெரிக்க அணி (2:58.47) முதலிடம் பிடித்தது. ஒட்டுமொத்த தகுதிச் சுற்றிலும் கிரேட் பிரிட்டன் (3வது இடம், 2:59.42), ஜமைக்கா (2:59.82, 5வது இடம்) போன்ற முன்னணி அணிகளை பின்னுக்குத் தள்ளி இந்தியா 2வது இடம் பிடித்திருப்பதால், இறுதிப் போட்டியிலும் அசத்தி பதக்கம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.