ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஈட்டி எறிதல் பைனலில் பங்கேற்க இந்திய வீரர்கள் நீரஜ் சோப்ரா, டி.பி.மானு, கிஷோர் ஜெனா ஆகியோர் தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். தகுதிச் சுற்றின் ஏ பிரிவில் தனது முதல் வாய்ப்பிலேயே 88.77 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து அசத்திய ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா பைனலுக்கு முன்னேறியதுடன் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்றார்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி அளவாக 85.50 மீட்டர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏ பிரிவில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரர் டி.பி.மானு (81.31 மீ.) 3வது இடம் பிடித்து பைனலுக்கு தகுதி பெற்றார். பி பிரிவில் களமிறங்கிய கிஷோர் ஜெனா 80.55 மீட்டர் தூரத்துக்கு எறிந்து (5வது இடம்) பைனலுக்கு முன்னேறினார். உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஈட்டி எறிதலில் 3 இந்திய வீரர்கள் பைனலுக்கு முன்னேறி இருப்பது இதுவே முதல் முறையாகும்.