கூடலூர் : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கூடலூர் வனத்துறை சார்பில், பளியங்குடி, குமுளி, பென்னிகுக் மணிமண்டபம் பகுதிகளில் கிடந்த குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டது.மக்களிடம் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும் ஆண்டுந்தோறும் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. 1974ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு தேனி மேகமலை கோட்டம், திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் கூடலூர் வனச்சரகம் சார்பில் பளியன்குடி பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் கூடலூர் வனச்சரகத்தின் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டது. பழங்குடி மக்களிடம் சுற்றுச்சூழல் குறித்தும், உலக வெப்பமயமாதல் குறித்தும், அதற்காக நாம் மேற்கொள்ளவேண்டிய முன்தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ரேஞ்சர் முரளிதரன் விளக்கி கூறினர்.
இதையடுத்து ரேஞ்சர் முரளிதரன் தலைமையில் வனவர்கள் பூபதி, திருமுருகன், குருசாமி மற்றும் வனத்துறை ஊரியர்கள் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து வனத்தறையினர் பளியன்குடி குடியிருப்பு பகுதியில் பிளாஸ்டிக், கழிவு குப்பைகளை அகற்றினர்.இதைத்தொடர்ந்து தமிழக எல்லை குமுளி பஸ் நிறுத்தம், குமுளி பணிமனை, குமுளி சோதனைச் சாவடி, லோயர்கேம்ப் பென்னிகுயிக் நினைவு மணிமண்டபம் பகுதிகளில் சுத்தம் செய்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.
பின்பு மற்றும் லோயர்கேம்ப்-குமுளி மலைச்சாலையில், சுற்றுலாப்பயணிகள் மற்றும் வாகனங்களில் செல்பவர்கள் வீசிச்செல்லும் பேப்பர்தட்டு, பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள்,
குப்பை கழிவுகள், மதுபான பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்களை வனத்துறையினர் அகற்றி அழித்தனனர். நிகழ்ச்சியில் வனத்துறையினர், தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.