சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணைக் கைதியான கணவரை தாக்கிய சிறை காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையை சேர்ந்த ரோஷன் சல்மா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், விசாரணை கைதியாக கடந்த நான்கு ஆண்டுகளாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எனது கணவர் முகமது ரிப்பாஸை சிறை காவலர்கள் கண்ணன், சதீஷ் மற்றும் முரளி ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எனது கணவரை காவலர்கள் ஷூ கால்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் எனது கணவர் பலத்த காயமடைந்துள்ளார். தற்போது தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ள எனது கணவருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறும், சிறை காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த நிலையில், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் வழக்கறிஞர் எஸ்.நதியா முறையிட்டார். அவரது முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் திங்கட்கிழமை விசாரிப்பதாக தெரிவித்தனர்.