போபால்: மத்திய பிரதேசத்தில் போதிய சாலை வசதி இல்லாததால் பிரசவ வலியால் துடித்த பெண்ணை 1.5 கி.மீ தூரத்திற்கு கட்டிலில் அப்பகுதி மக்கள் தூக்கிச் சென்றனர். மத்திய பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டம் சுவா கெடா கிராமத்தை சேர்ந்த தேவ்ராஜ் பமானியா என்பவரின் கர்ப்பிணி மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால் மோயா பானி பஞ்சாயத்திற்குச் செல்வதற்கான சாலை சேறும் சகதியுமாக மிகவும் மோசமாக இருந்தது. அதனால் ஆம்புலன்ஸ் கிராமத்திற்குள் செல்ல முடியவில்லை. பிரதான சாலையில் ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பிரசவ வலியால் துடித்த பெண்ணை ஆம்புலன்சில் அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வேறுவழியின்றி அக்கிராமத்தை சேர்ந்த சிலர், அந்தப் பெண்ைண கட்டிலில் சுமந்து சேறும் சகதியுமான சாலையை கடந்து சென்றனர்.
கிட்டத்தட்ட 1.5 கிலோ மீட்டர் தூரம் அந்தப் பெண்ணை கட்டிலில் சுமந்து, ஆம்புலன்சை அடைந்தனர். அதன்பின் அந்த ஆம்புலன்ஸ் மோயா பானி பஞ்சாயத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை சென்றடைந்தது. இந்த கிராமத்திற்கு முறையான சாலை வசதி ஏற்படுத்தித் தரக்கோரி பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்க வில்லை என்று கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த 2021 செப்டம்பரில், சத்தர்பூர் மாவட்டத்தை சேர்ந்த உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு, உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால், டிராக்டரில் அந்தப் பெண்ணை ஏற்றிச் ெசன்றனர். ஆனால் அந்த டிராக்டர் சேற்றில் சிக்கிக் கொண்டதால் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.