சென்னை: ஆவின் நிறுவனத்தை விட அதிக விலைக்கு அமுல் பால் கொள்முதல் செய்வதாக கூறும் தகவல் பொய்யானது என அமுல் நிறுவன ஒப்பந்ததாரர் விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசின் ஆவின் நிறுவனம் மூலமாக தமிழகம் முழுவதும் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் குஜராத் மாநில அரசின் பொதுத்துறை பால் நிறுவனமான அமுல் தமிழ்நாட்டில் தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்தற்கான பணியை தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இதற்காக தமிழக விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தமிழ்நாட்டில் பால் கொள்முதலை துவக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில், ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அமுல் நிறுவன தமிழக ஒப்பந்ததாரர்; தமிழகத்தில் ஒரு கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. 36 லட்சம் லிட்டர் பால் மட்டுமே ஆவின் கொள்முதல் செய்கிறது. அமுலுக்கு பால் வழங்க வேண்டும் எனில் ஆவினிடமிருந்து என் ஓ சி சான்றிதழ் பெற விதிகள் உள்ளன. ஆவின் நிறுவனம் விவசாயிகளுக்கு நிர்ணயித்த கொள்முதல் விலையே தாங்களும் நிர்ணயித்திருக்கிறோம்.
ஆவின் நிறுவனத்தை விட அதிக விலைக்கு அமுல் பால் கொள்முதல் செய்வதாக் கூறும் தகவல் முற்றிலும் பொய்யானது. ஆவின் நிறுவன பால் முகவர்களிடம் அமுல் நிறுவனத்திற்கு பால் வழங்க வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தவில்லை. விவசாயிகள் பாதிப்பை தடுக்கவே அமுல் செயல்படும். ஆவின் நிறுவனத்திற்கு எதிராக செயல்படாது. இடைத்தரகர்கள் மூலமாக பால் வாங்க மாட்டோம். அமுல் வெளிப்படை தன்மையுடன் செயல்படும். 10 நாட்களுக்கு ஒரு முறை பால் கொள்முதல் பணம் வழங்கும் என்றும் தெரிவித்தார்.