மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்றுக்காலத்தில் ஜம்போ கொரோனா சிகிச்சை மையங்களை அமைப்பதில் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்நிலையில் சிவசேனா தலைவர்கள் சஞ்சய் ராவத் மற்றும் ஆதித்யா தாக்கரே ஆகியோருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இந்நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ‘நாங்கள் எந்த விசாரணைக்கும் பயப்பட மாட்டோம். ஒன்றிய அரசு விசாரணை நடத்த விரும்பினால் தானே மாநகராட்சி நாக்பூரிலும் விசாரிக்க வேண்டும். பிஎம் கேர்ஸ் நிதியையும் ஆய்வு செய்யுங்கள். பிஎம் கேர்ஸ் நிதி எந்த விசாரணையின் வரம்புக்குள்ளும் வராது. லட்சக்கணக்கான கோடி வசூலிக்கப்பட்டது. இதன் மூலம் வழங்கப்பட்ட பல வென்டிலேட்டர்கள் பழுதடைந்துள்ளன. நாங்களும் ஆய்வு நடத்துவோம்’ என்றார்.