Monday, May 6, 2024
Home » என்ன நடக்கிறது?

என்ன நடக்கிறது?

by Karthik Yash

குஜராத் மாநிலம் சூரத் மக்களவை தொகுதியில் பா.ஜ வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அவரை எதிர்த்து மனுத்தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி மற்றும் மாற்று காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷ் பட்சலா ஆகியோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன. மீதம் உள்ள 8 வேட்பாளர்கள் கடைசி நாளில் வாபஸ் பெற்றதால் பா.ஜ வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
இந்த விவகாரத்தில் என்ன நடந்தது, சூரத்தில் என்ன நடக்கிறது என்பதை தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகள் தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் வழக்கம் போல தேர்தல் ஆணையம் மவுனம் காக்கிறது. கடந்த 18ல் சூரத் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி வேட்புமனு தாக்கல் செய்தார். 19ல் பா.ஜ. ஊழியர் தினேஷ் ஜோதானி, காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனுவை எதிர்த்தார். நிலேஷ் கும்பானியின் வேட்பு மனுவில் முன்மொழிந்தவர்களின் கையெழுத்து போலியானது என்று அவர் குற்றம் சாட்டினார். ஏப்ரல் 20ம் தேதி நிலேஷ் கும்பானி வேட்புமனுவில் உள்ள கையெழுத்து தங்களுடையது அல்ல என்று கூறி, முன்மொழிந்தவர்களிடம் இருந்து வாக்குமூலம் பெற்றதாக வாக்குச்சாவடி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்ட தேர்தல் அதிகாரி சவுரப் பர்தி, இதுகுறித்து ஒரே நாளில் நிலேஷ் கும்பானி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் கும்பானியும் வரவில்லை, அவரை ஆதரித்து மனுவில் கையெழுத்து போட்ட 4 பேரையும் காணவில்லை. அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதையடுத்து 21 அன்று காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனுவையும், மாற்று வேட்பாளர் சுரேஷ் பட்சலா வேட்புமனுவையும் மாவட்ட
தேர்தல் அதிகாரி ரத்து செய்தார். கடைசி நாளில், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பியாரே லால் பாரதி மற்றும் சுயேச்சைகள் உள்பட 8 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை அடுத்தடுத்து வாபஸ் பெற்றனர்.

இதையடுத்து பாஜவின் முகேஷ் தலால் போட்டியின்றி சூரத் எம்பியாக தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக தேர்தல் அதிகாரியால் அறிவிக்கப்பட்டது. சூரத் தொகுதியில் நடந்தது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை. காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி மாயமாகி விட்டார். அவரை ஆதரித்து கையெழுத்து போட்டவர்களை காணவில்லை. காங்கிரஸ் வேட்பாளர்கள் தவிர மற்ற வேட்பாளர்களும் ஏதோ ஒரு காரணத்தால் மனுக்களை வாபஸ் பெற்று இருக்கிறார்கள். இதை எல்லாம் தலைமை தேர்தல் ஆணையம் முறைப்படி விசாரித்து சூரத் தொகுதியில் நியாயமான முறையில் தேர்தல் நடத்த வழிவகை செய்து இருக்க வேண்டாமா?

சூரத் தொகுதிக்கான தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து விட்டு, ஜூன் 1ம் தேதி 7ம் கட்ட தேர்தல் முடிவதற்குள் மறு அறிவிப்பாணை வௌியிட்டு காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் உரிய முறையில் மனுதாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டு இருக்க வேண்டாமா?. இதை எல்லாம் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு இருக்க வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம் மவுனம் காப்பதால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மாயமான காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். அவர் பா.ஜவில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை பார்க்கும் போது பா.ஜவுடன் சேர்ந்து தேர்தல் ஆணையமும் அல்லவா அழுகுனி ஆட்டம் ஆடுவது போல் தெரிகிறது.

You may also like

Leave a Comment

one × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi