Tuesday, May 14, 2024
Home » 3 பேர் கொலைக்கு பழிக்குப்பழியாக தலை, கைகளை துண்டித்து ரவுடி படுகொலை: நடுரோட்டில் சடலம் வீச்சு: மீஞ்சூரில் பயங்கர சம்பவம்

3 பேர் கொலைக்கு பழிக்குப்பழியாக தலை, கைகளை துண்டித்து ரவுடி படுகொலை: நடுரோட்டில் சடலம் வீச்சு: மீஞ்சூரில் பயங்கர சம்பவம்

by Arun Kumar

சென்னை: சென்னை அருகே பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பஜாரில் தலை, கைகள் துண்டிக்கப்பட்டு ரவுடி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அடுத்த மீஞ்சூர் பஜார் பகுதியில் நேற்று அதிகாலையில் துணியால் சுற்றப்பட்ட சடலம் ஒன்று சாலையில் கிடந்தது. பொதுமக்கள் அருகில் சென்று பார்த்தபோது, தலை மற்றும் கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் 2 கைகள் மற்றும் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும், சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் ரத்த கறைகள் ஏதும் இல்லை. எனவே, வேறு எங்கோ கொலை செய்து விட்டு, மருத்துவமனையில் பயன்படுத்துவது போன்று பச்சை நிற படுக்கை விரிப்பால் சடலத்தை சுற்றிக்கொண்டு வந்து வீசிச் சென்றது தெரிய வந்தது. கொலை செய்யப்பட்ட நபர் யார் என விசாரணை நடத்தினர்.

இதனிடையே சோழவரம் அடுத்த பெருங்காவூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் அஜித்குமார் என்பவரது சமாதியில் துண்டிக்கப்பட்ட தலை ஒன்று இருப்பதை பார்த்த பொதுமக்கள், இதுபற்றி போலீசாருக்கு தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற மீஞ்சூர் போலீசார், அந்த தலையை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது மீஞ்சூர் பஜாரில் கொலை செய்யப்பட்டவரின் தலை என்பது தெரிந்தது. விசாரணையில், பொன்னேரி அடுத்த வஞ்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அஸ்வின்குமார் (26) பிரபல ரவுடி என்பதும், சமீபத்தில் காதல் திருமணம் செய்ததும் தெரிந்தது.
பின்னர், சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை பிடித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்தாண்டு செங்குன்றம் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் உடற்பயிற்சி கூடத்தில் முன்விரோதம் காரணமாக 3 பேர் கொலை செய்யப்பட்டனர். இதில் கொலை செய்யப்பட்ட பெருங்காவூரைச் சேர்ந்த அஜித்குமார் என்பவரது சமாதி மீது அஸ்வின் குமாரின் துண்டிக்கப்பட தலையை வைத்துள்ளனர். எனவே பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மூவர் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான கருப்பு அஜித் என்பவருடைய பிறந்தநாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.

இதற்கு அஸ்வின்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்டுள்ளார். கடந்தாண்டு கொலையான அஜித்குமாரின் நண்பர்கள் இதனை கண்டு கடும் ஆத்திரம் அடைந்தனர். எனவே பழி தீர்ப்பதற்காக அஸ்வின்குமாரை கொடூரமாக கொலை செய்திருக்கலாம், என கூறப்படுகிறது. தலை, கைகள் துண்டிக்கப்பட்டு வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மீஞ்சூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* தனிப்படை அமைப்பு

அஸ்வின்குமார் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது நண்பர்கள் சிலர் அவரை அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் மீஞ்சூர் காவல் ஆய்வாளர் காளிராஜ், சோழவரம் ஆய்வாளர் ராஜ்குமார், பொன்னேரி காவல் ஆய்வாளர் சிவகுமார், திருப்பாலைவனம் காவல் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

eighteen − 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi