வேலூர் : தமிழ்நாட்டின் முக்கிய கால்நடை வாரச்சந்தைகளில் பொய்கை மாட்டுச்சந்தை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறும் இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் இருந்து வி.கோட்டா, குப்பம், பலமநேர், புங்கனூரு என பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
இந்நிலையில் நேற்று கறவை மாடுகள், ஜெசி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் என வரத்து அதிகரித்தது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘கடந்த சில வாரங்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் வந்ததால் வர்த்தகம் ₹80 லட்சம் மேல் நடந்தது. ஆனால் கடந்த வாரம் பெய்த தொடர் மழையால், கடந்த 2ம் தேதி நடந்த மாடு சந்தைக்கு கால்நடைகளின் வரத்து குறைந்து காணப்பட்டது. ஆனால் இன்று(நேற்று) நடந்த சந்தைக்கு அதிகளவில் கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் ₹1.30 கோடிக்கு வர்த்தகம் நடந்தது’ என்றனர்.