வெள்ளக்கோவில் : வெள்ளக்கோவில், கல்லாங்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (51). கடந்த 30 ஆண்டுகளாக பட்டி போட்டு 40க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலையில், அவர் வந்து பார்க்கும்போது பட்டியின் அருகில் நாய்கள் ஆடுகளை கொன்று தின்று கொண்டிருப்பதை பார்த்துள்ளார்.
உடனே நாய்களை விரட்டிவிட்டு பட்டியில் பார்க்கும்போது செம்மறி ஆடுகள் இறந்தும், 1 ஆடு கடிபட்டு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, மொத்தம் ஆறு ஆடுகள் இறந்தன. 1 ஆடு பலத்த காயத்துடன் உயிர் தப்பின. இதன் மதிப்பு ரூ.60 ஆயிரம் இருக்கும். இது குறித்து தங்கவேல் கூறியதாவது: ஆடுகளை நாய்கள் கடிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதனால் எங்களைபோல் ஆடு வளர்ப்போர் மிகவும் இழப்பை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் ஆடு வளர்ப்போர் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
ஆடுகளை கடித்த நாய்கள் அருகில் இருக்கும் பொதுமக்களையும் கடிக்க வருவாதாக கூறுகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.வெள்ளகோவில் அருகே உள்ள கச்சேரிவலசு, மூலனூர் ரோடு, நாச்சிபாளையம், அய்யனூர், உப்புபாளையம் ரோடு ஆகிய பகுதியில் கடந்த சில மாதங்களாக நாய் கடித்து 100க்கு மேற்பட்ட ஆடுகள் இறந்தன. இதனால் ஆடு வளர்ப்போர் மிகவும் அச்சத்துடன் உள்ளனர்.