சென்னை: இலங்கை கடற்படையினர் கைது செய்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 6 மீனவர்களையும், படகுகளையும் மீட்க, ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன், அன்புமணி வலியுறுத்தியுள்ளனர். ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. அவர்களது 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒன்றிய அரசு, இலங்கை அரசின் வசம் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புமணி (பாமக தலைவர்): ஒரு வாரத்தில் மட்டும் 3 நிகழ்வுகளில் 40 தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை படையினரின் அத்துமீறலுக்கு நிரந்தர தீர்வு காண ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.