வாணியம்பாடி : வாணியம்பாடி அருகே பஸ்சில் தொங்கியடி வாலிபர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இதை தவிர்க்க கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயத்திற்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. வார நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான மக்கள் இந்த வழித்தடத்தில் பயணிப்பதால் வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் நோக்கி செல்லும் அனைத்து பஸ்களும் எப்போதும் நிரம்பியபடியே இருக்கும்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் நோக்கி சென்ற தனியார் பஸ்சில் ஏராளமான பயணிகள் சென்றனர். இதனால், இடம் இன்றி வாலிபர்கள் சிலர் பஸ்சின் படிக்கட்டு மற்றும் பின்புற ஏணி மீது நின்றபடி ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். வாலிபர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்வதை பார்க்கும் பொதுமக்கள் ஆலங்காயத்திற்கு கூடுதல் பஸ் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.