வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே பெங்களூருவில் இருந்து கடத்திய 1,248 மதுபாக்கெட்டுகளை போலீசார் காருடன் பறிமுதல் செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பஸ் நிறுத்தம் வழியாக வெளிமாநில மதுபான பாக்கெட்டுகள் காரில் கடத்திச்செல்லப்படுவதாக மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று மாலை போலீசார், செட்டியப்பனூர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. இதனால் போலீசார் தங்கள் வாகனத்தில் பின்தொடர்ந்தனர். இதனால் டிரைவர் காரை நிறுத்திவிட்டு தப்பிஓடிவிட்டார். இதையடுத்து போலீசார் அந்த காரை சோதனை செய்தனர். அந்த காரில் ₹59 ஆயிரம் மதிப்பிலான 1,248 கர்நாடக மாநில மதுபான பாக்கெட்டுகள் இருப்பது தெரிந்தது. இதனை பெங்களூருவில் இருந்து கடத்தியுள்ளனர். இதையடுத்து அவற்றை காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய டிரைவரை தேடிவருகின்றனர்.