வந்தவாசி : வந்தவாசி அருகே டிப்ளமோ படித்துவிட்டு 3 ஆண்டுகளாக கிளீனிக் நடத்தி வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தில் போலி டாக்டர் ஒருவர் கிளீனிக் நடத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக வந்தவாசி அரசு மருத்துவமனை நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மருத்துவ அலுவலர் சிவப்பிரியா தலைமையில் தெள்ளார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதி, சப்-இன்ஸ்பெக்டர் சத்யா மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் இரவு நல்லூர் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், போலி டாக்டர் நடத்தி வரும் கிளீனிக்கிற்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தெரியவந்தது. மேலும் அங்கு ஊசி செலுத்துவதற்கான சிரஞ்சு, குளுக்கோஸ் பாட்டல்கள், மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இருப்பது தெரிந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதை தொடர்ந்து கிளீனிக் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தவாசி டவுன் காந்தி சாலையை சேர்ந்த சசிகுமார்(38) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அவர் டிப்ளமோ படித்துவிட்டு 3 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தெரிந்தது. இதையடுத்து சசிகுமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை வந்தவாசி மாஜிஸ்திரேட் செந்தில்குமார் முன் நேற்று ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.