டெல்லி: வள்ளலார் இன்று இருந்திருந்தால் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை நிச்சயம் பாராட்டியிருப்பார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வள்ளலாரின் 200வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் அவரது சிலை திறக்கப்பட்டது. இதனை கவர்னர் ரவி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பிரமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துக்கொண்டார். அப்போது உரையாற்றிய பிரதமர்; வள்ளலாரின் ஆன்மீக கருத்துகள் இன்றும், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளிக்கிறது.
அவர் சக மனிதர்கள் மீதான கருணையை வலியுறுத்தி ஜீவகாருண்யத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறையில் நம்பிக்கை கொண்டிருந்தார். இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் கடவுளின் அம்சத்தை கண்டவர் வள்ளலார். வள்ளலாரின் போதனைகள் அனைவரது வளர்ச்சிக்காகவும், சமத்துவ சமுதாயத்தை வலியுறுத்துவதாகவும் இருந்தது. தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகியவற்றில் புலமை பெற வேண்டும் என வள்ளலார் விரும்பினார். சக மனிதர்கள் மீது அன்பு செலுத்தும் ஜீவ காருண்பத்தின் மீது வள்ளலார் நம்பிக்கை கொண்டிருந்தார்.
சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என வள்ளலார் விரும்பினார். வள்ளலார் இன்று இருந்திருந்தால் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை நிச்சயம் பாராட்டியிருப்பார். ஒரே பாரதம் உண்ணத பாரதம் என்ற நமது ஒட்டுமொத்த சிந்தனைக்கு வலு சேர்க்க காலமும் இடமும் கலந்த நமது பன்முகத்தன்மைக்கு பொதுயிழையாக திகழ்கின்ற பெரும் ஞானிகளின் போதனைகள் உதவுகின்றன. அவரது போதனைகளை பரப்புவோம். ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி என்பதை உறுதி செய்வோம் இவ்வாறு கூறினார்.