நீலகிரி: கோடை சீசன் காரணமாக ஒருவழி பாதையாக மாற்றப்பட்டிருந்த மேட்டுப்பாளையம், குன்னூர், உதகை நெடுஞ்சாலையில் இன்று முதல் இருவழிப் போக்குவரத்து தொடங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் மே மாதம் இறுதி வரை கோடை சீசன் காலமாக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த நிலையில், ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து மேட்டுப்பாளையம், குன்னூர், உதகை தேசிய நெடுஞ்சாலை மற்றும் உதகை, கோத்தகிரி, மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலைகள் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.
கோவை, ஈரோடு என பல்வேறு சமவெளி பகுதிகளில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வருவோர் மேட்டுப்பாளையம், குன்னூர் வழியாக வர அனுமதிக்கப்பட்டனர். அதேபோல உதகையில் இருந்து திரும்பி செல்லும் வாகனங்கள், கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று மாலையுடன் கோடை சீசன் நிறைவடைந்தது. இதையடுத்து ஒருவழிப் பாதையாக பயன்படுத்தப்பட்ட உதகை, மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலைகளில் இன்று காலை முதல் வழக்கம் போல இருபுறமும் வாகனங்கள் சென்றுவர அனுமதிக்கப்படுகின்றன. இதனால் உள்ளூர் மக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.