பெங்களூருவில் வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் அதை சமாளிக்க காங். அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கும் பணியை முழுமையாக அரசே மேற்கொள்ளும். பெங்களூருவில் உள்ள தனியார் டேங்கர் லாரிகள் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும். குடிநீர் டேங்கர் லாரிகள் தண்ணீர் கட்டணத்தை உயர்த்தி மக்களை கொள்ளையடிப்பதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வரும் 7-ம் தேதிக்குள் குடிநீர் டேங்கர் லாரிகள் பெங்களூரு மாநகராட்சியில் பதிவு செய்ய வேண்டும். பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை கர்நாடகத்தில் போதிய அளவு பெய்யாததால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோடை காலம் தொடங்கியுள்ளதால் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கர்நாடக காங்கிரஸ் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே பெங்களூரு நகரில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க ரூ.131 கோடியை மாநகராட்சி ஒதுக்கீடு செய்துள்ளது.
மகாதேவபுரா, பொம்மனஹள்ளி, தாசரஹள்ளி, ஆர்.ஆர்.நகர், யெலஹங்காவில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நந்திமலையில் உற்பத்தியாகும் முக்கிய குடிநீர் ஆதாரமான அர்க்காவதி நதியில் உள்ள அணையும் வறண்டுவிட்டது. அர்க்காவதி அணை வறண்டுவிட்டதால் பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது இவ்வாறு கூறினார்.