*5 பேர் படுகாயம்: பதற்றம், போலீஸ் குவிப்பு
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே புகைப்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழாவில் இருதரப்பினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 5 பேருக்கு மண்டை உடைந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புகைப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு சாகை வார்த்தல் திருவிழா நேற்று நடந்தது. அப்போது இளைஞர் ஒருவர் பெண் வேடமிட்டு வீதி உலா வந்துள்ளார். அந்த இளைஞரை தெற்கு தெருவை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கேலி, கிண்டல் செய்துள்ளனர். பெண் வேடமிட்ட இளைஞரின் நண்பர்கள் கிண்டல் செய்த இளைஞரிடம் தட்டிக் கேட்டனர்.
அப்போது இருதரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதில் ஒருவரையொருவர் உருட்டுக்கட்டை, கழியால் தாக்கிக் கொண்டனர். இதில் 5 பேரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து படுகாயம் அடைந்தவர்களை அங்குள்ளவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பின்னர் இது தொடர்பாக எலவனாசூர்கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் அந்த கிராமத்தில் மேலும் பிரச்னை ஏற்படாமல் இருக்க கூடுதல் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.