குலு: இமாச்சல்லில் நடந்த சாலை விபத்தில் டிவி சீரியல் நடிகை வைபவி உபாத்யாய் பலியானார். இமாச்சல பிரதேசம் குலு மாவட்டம் சித்வா என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில், ‘சாராபாய் – சாராபாய்’ என்ற தொலைக்காட்சி தொடரின் நடிகை வைபவி உபாத்யாய் இறந்தார். இதனை திரைப்பட தயாரிப்பாளர் ஜே.டி.மஜிதியா சமூக வலைதளங்களில் பகிர்ந்து உறுதிபடுத்தியுள்ளார். அவரது பதிவில், ‘என்னால் நம்ப முடியவில்லை. திரையுலகின் திறமையான நடிகையும், எனது நல்ல தோழியுமான வைபவி உபாத்யாய் காலமானார்.
இமாச்சல் பிரதேசத்தில் நடந்த விபத்தில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டது. தற்போது அவரது குடும்பத்தினர் அவரது உடலை மும்பைக்கு கொண்டு வர உள்ளனர். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது’ என்று கூறியுள்ளார். மறைந்த நடிகை வைபவி உபாத்யாயின் மறைவுக்கு டிவி சீரியல் நடிகை ரூபாலி கங்குலியும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதேபோல் தொலைக்காட்சி நட்சத்திரங்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.