சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: ஐதராபாத், உஸ்மானியா, பெங்களூரு, மைசூரு மற்றும் மும்பை பல்கலைக்கழகங்களில் இயங்கிவரும் தமிழ்த்துறைக்கான பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாத காரணத்தினால் அத்துறையை தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழ் மொழி குறித்து ஆய்வு செய்ய முடியாத சூழல் நிலவுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தனித்துவமிக்க தமிழ் மொழியை பாதுகாக்கும் நோக்கில், அண்டை மாநிலப் பல்கலைக்கழகங்களில் செயல்படும் தமிழ்த்துறைகளுக்கு தேவையான பேராசிரியர்களை நியமித்து, அத்துறைகள் தடையின்றி செயல்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.