Wednesday, May 8, 2024
Home » திருச்சி, ராமநாதபுரம் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நேர்மையாக நடத்த ஒருங்கிணைந்த பணி

திருச்சி, ராமநாதபுரம் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நேர்மையாக நடத்த ஒருங்கிணைந்த பணி

by Lakshmipathi

*வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் அலுவலர் வலியுறுத்தல்

புதுக்கோட்டை : திருச்சி, ராமநாதபுரம் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நேர்மையாக நடத்த ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்று வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா வலியுறுத்தினார்.இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, புதுக்கோட்டை இராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நாடாளுமன்ற பொதுத் தேர்தல் – 2024 தொடர்பாக, 24-திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, 180-புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில், தேர்தல் பணிபுரியும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பினை, மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா, நேற்று துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், நாடாளுமன்ற பொதுத் தேர்தல் – 2024 தொடர்பாக, 35-ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, 183-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில், தேர்தல் பணிபுரியும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார்.

பயிற்சி வகுப்புகளில், வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு நாளுக்கு முந்தைய நாளுக்கான பணிகள், வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்குச்சாவடி முகவர்கள், மாதிரி வாக்குப்பதிவு, பச்சை நிற தாள் முத்திரை, வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படும் நபர்கள், தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தியுள்ளபடி அவ்வப்போது கைபேசி செயலி ஆப் மூலமும், மண்டல அலுவலருக்கும் தகவல் அனுப்புதல், எதிர்க்கப்பட்ட வாக்குகள், ஆய்வுக்குரிய வாக்குகள், வாக்காளர் வாக்களிக்கும் முறை, வாக்குப்பதிவு முடிவுக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

மேலும், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல், தேர்தல் பணி சான்று, வாக்காளரின் இடது கை ஆட்காட்டி விரலில் நகத்திற்கும், தோலிற்கும் மத்தியில் அழியாதமை வைத்தல், தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட 12 அடையாள ஆவணங்களின் அடிப்படையில் மட்டுமே வாக்களிக்க அனுமதித்தல், வாக்காளர்
எந்த ஆவணத்தைக் கொண்டு வாக்களித்தார் என்ற விபரத்தை பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, நாடாளுமன்ற பொதுத் தேர்தலினை நேர்மையான முறையில் நடத்திட அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என்றார்.இந்நிகழ்வுகளில், வருவாய் கோட்டாட்சியர்கள் ஐஸ்வர்யா (புதுக்கோட்டை), சிவக்குமார் (அறந்தாங்கி), செய்தி மக்கள் தொடர்பு அலுவலர். பிரேமலதா, வட்டாட்சியர்கள் பரணி (புதுக்கோட்டை),திருநாவுக்கரசு (அறந்தாங்கி), மார்டின் லூதர்கிங் (ஆவுடையார்கோவில்),சேக் அப்துல்லா (மணமேல்குடி) மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

2 + 20 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi