*மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ஆய்வு
திருப்பத்தூர் : திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ₹56 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டும் பணியை மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சாரா ஜெலின்பால் நேற்று திடீர் ஆய்வு செய்தார்.திருப்பத்தூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நேற்று மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சாரா ஜெலின்பால் திடீர் ஆய்வு செய்தார். அப்போது, மருத்துவமனையில் நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்து அனைத்து வார்டுகளிலும் ஆய்வு செய்து, நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை செய்தார்.
தொடர்ந்து, அங்குள்ள சமையல் கூடத்தில் உள்ள சமையல் செய்யும் பணி சுகாதாரமாக நடக்கிறதா, நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமான முறையில் உள்ளதா என ஆய்வு செய்தார். பின்னர், அங்கு ₹56 கோடி மதிப்பில் 6 அடுக்குமாடி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சாரா ஜெலின்பால் தெரிவித்ததாவது:
திருப்பத்தூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு டாக்டர்கள் தரமான சிகிச்சை அளித்து வருகிறதாகவும், 24 மணி நேரமும் மருத்துவமனையில் டாக்டர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். செவிலியர்கள் மற்றும் அவரது உதவியாளர்கள், மருத்துவர்கள் நோயாளிகளை நல்லபடியாக கண்காணித்து கொள்கின்றனர் என்றும் தெரிவிக்கின்றனர்.
தற்போது 6 அடுக்குமாடி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் இந்த மருத்துவமனையில் நவீன அறுவை அரங்கம் உட்பட மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளுக்கு ஈடாக செயல்படும். அனைத்து வகையான சிகிச்சைகள் மற்றும் ஆய்வகங்கள் இந்த கட்டிடத்தில் அமைக்கப்படும்.
இந்த பணிகளை துரிதப்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு மே மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு இந்த மருத்துவமனையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.அப்போது, மருத்துவ அலுவலர் சிவகுமார், அறுவை சிகிச்சை நிபுணர் பிரபாகரன், வேல்முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.