திருப்பதி: திருப்பதி வடமலை சாகாளி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் சந்து (15). திருப்பதி அலிபிரியில் தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படும் விடுதியுடன் கூடிய காது கேளாதோர் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். விடுதியில் மாணவர்களுக்கு 4 கழிவறைகள் மட்டுமே உள்ளன. நேற்று மாலை சந்து உள்ளிட்ட மாணவர்கள் கழிவறைக்கு செல்ல வந்தபோது, ‘யார் முதலில் செல்வது’ என தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த மாணவர்கள், சந்துவிடம் பெயிண்ட் ஆயிலை கொடுத்து குடிக்க வேண்டும் என வற்புறுத்தினர். சந்து மறுத்தார். இதனால் ஆத்திரத்துடன் பெயிண்ட் ஆயிலை ஊற்றி சந்து மீது தீ வைத்தனர். உடல் முழுவதும் தீ பரவியதில் அலறி துடித்தார். சக மாணவர்கள் ஓடி வந்து சந்து மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.