திருமலை : ஏழுமலையான் கோயிலில் சசிகலா நேற்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக சசிகலா நேற்று முன்தினம் திருமலைக்கு வந்தார். அங்குள்ள ரஞ்சனா விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர், 4 மாடவீதியில் உள்ள வராக சுவாமி, ஹயக்கிரீவர் கோயிலில் வழிபாடு செய்தார். இரவு திருமலையில் தங்கினார். நேற்று அதிகாலை ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசன வரிசையில் சுவாமி தரிசனம் செய்தார்.
சுவாமி தரிசனம் செய்த அவருக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள், வேத பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். கோயிலுக்கு வெளியே வந்த அவரிடம் நிருபர்கள் அரசியல் நிலவரம் குறித்து கேட்க முயன்றனர். ஆனால் அவர் பதிலளிக்காமல் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார்.