*கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்ட பக்தர்கள்
திருமலை : திருச்சானூரில் கார்த்திகை பிரமோற்சவ 4ம்நாளான நேற்று கற்பக விருட்ச வாகனத்தில் பத்மாவதி தாயார் மாடவீதியில் பவனி வந்தார். அப்போது, திரண்டிருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 10ம் தேதி காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. பிரமோற்சவத்தையொட்டி, பத்மாவதி தாயார் சுப்ரபாத சேவையும் அதனை தொடர்ந்து சகஸ்ரநாமார்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து பத்மாவதி தாயார் தினமும் காலை மற்றும் இரவில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இந்நிலையில் பிரமோற்சவத்தின் நான்காம் நாளான நேற்று காலை கற்பக விருட்ச வாகனத்திலும், இரவு அனுமந்த வாகனத்தில் பத்மாவதி தாயார் நான்கு மாடவீதியில் எழுந்தருளி அருள் பாலித்தார். சுவாமி வீதி உலாவில் இருபுறமும் காத்திருந்த பக்தர்கள் கற்பூர ஆர்த்தி எடுத்து வழிபட்டனர். வாகனசேவையில் முன்னதாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்து தர்ம பிரசார பரிஷத் திட்டத்தின் கீழ் 11 கலைக் குழுக்களைச் சேர்ந்த கலைஞர்கள் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் வந்தனர்.
திருப்பதி எஸ்.வி.சங்கீத மற்றும் நாட்டிய கல்லூரி மாணவ, மாணவியர் பல்வேறு அன்னமய்யா சங்கீர்த்தனங்களுக்கு ஏற்ப பல்வேறு தெய்வ உருவத்தில் அலங்கரித்து கொண்டும் குச்சிப்புடி நடனம் ஆடி வந்தனர். திருப்பதியில் இருந்து பெண்கள் கோலாட்டம், நடனம், நெல்லூர் குரு கிருபா கலாஷேத்ராவைச் சேர்ந்த கலைஞர்கள் லட்சுமி, கவுதம் நடனம் ஆடி வந்தனர். சேலத்தைச் சேர்ந்த கலைஞர்கள் வீர நாட்டியம், கோபிகா நடனம், மேளம், வைலாட்டியம், ரிப்பன் நடனம், மயில் நடனம் என வித்தியாசமான நடனங்களை ஆடியபடி வந்து பக்தர்களை கவர்ந்தனர்.