*வேட்பு மனுதாக்கல் நாளையுடன் முடிகிறது
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளில் நேற்று திமுக, அதிமுக, பாமக உள்பட 19 வேட்பாளர்கள் நேற்று வேட்புமனுதாக்கல் செய்தனர்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. அதன்படி, தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. அதையொட்டி, வேட்புமனுதாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கி நாளையுடன் நிறைவடைகிறது.
வேட்புமனுதாக்கல் தொடங்கிய ஆரம்ப நாட்களில், திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளில் வேட்புமனுதாக்கல் மந்தமாக இருந்தது. இந்நிலையில், முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் முழுமையாக வெளியாகியுள்ள நிலையில், நேற்று முதல் வேட்புமனுதாக்கல் சூடுபிடித்திருக்கிறது.
அதையொட்டி, வேட்புமனுதாக்கல் நடைபெற்ற திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திலும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகங்களான திருவண்ணாமலை ஆர்டிஓ அலுவலகம் மற்றும் ஆரணி ஆர்டிஓ அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில், திருவண்ணாமலை தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வேட்புமனுக்களை பெற்றுக்கொண்டார். வேட்புமனுக்களை தாக்கல் செய்த வேட்பாளர்கள், கலெக்டர் முன்னிலையில் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
அதன்படி, திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், திருவண்ணாமலை தொகுதியில் தற்போதய எம்பியுமான சி.என்.அண்ணாதுரை நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, முஸ்லீம் லீக் ஆகிய கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.மேலும், அதிமுக வேட்பாளர் எம்.கலியபெருமாள், கட்சி நிர்வாகிகளுடன் வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக மாற்று வேட்பாளராக அவரது மகள் இந்துமதி வேட்புமனு தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி ஆர்.ரமேஷ்பாபு, நாம் தமிழர் கட்சி மாற்று வேட்பாளர் பாண்டியன், மக்கள் புரட்சி கழகம் பூங்கொடி, சுயேட்சை வேட்பாளர்கள் கோதண்டபாணி, எஸ்.உதயகுமார் ஆகிய 8 பேர் நேற்று மனுதாக்கல் செய்தனர்.
அதேபோல், ஆரணி தொகுதிக்கான வேட்புமனுக்களை நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் டிஆர்ஓ பிரியதர்ஷினி பெற்றுக்கொண்டார். அப்போது, ஆரணி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, முஸ்லீம் லீக் ஆகிய கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் மனுதாக்கல் செய்தார். மேலும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் துரை, தாக்கம் கட்சி சார்பில் ஏ.சக்திவேல், வீர கீ வீர் இந்தியன் பார்ட்டி சேட்டு ஆகியோர் வேட்புமனுதாக்கல் செய்தனர்.
மேலும், ஆரணி தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான ஆரணி ஆர்டிஓ பாலசுப்பிரமணினிடம், அதிமுக வேட்பாளர் ஜி.வி.கஜேந்திரன், அதிமுக மாற்று வேட்பாளராக ராஜலட்சுமி, பாஜக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் ஏ.கணேஷ்குமார், சுயேட்சகைள் எம்.எழிலரசு, எம்.ஜெயசங்கர், இ.கஜேந்திரன், வி.மணிகண்டன் உள்ளிட்ட 11 பேர் மனுதாக்கல் செய்தனர்.
அதன்படி, திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளில் நேற்று ஒரே நாளில் 19 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுதாக்கல் நாளையுடன் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து, 28ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். 30ம் தேதி மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.