திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொதுமக்களிடமிருந்து 361 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்னைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 98 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 56 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 76 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 63 மனுக்களும், இதர துறைகள் சம்பந்தமாக 68 மனுக்களும் என மொத்தம் 361 மனுக்கள் பெறப்பட்டது.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தினார்.அதனைத் தொடர்ந்து, ஒரு வருடம் மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் இலவச பேருந்து பயண சலுகை அட்டைகளை 2 மாற்றுத்திறனாளிகளுக்கும், மாவட்டம் முழுவதும் பேருந்துகளில் பயணம் செய்யும் இலவச பேருந்து பயண அட்டைகளை பார்வையற்ற 2 மாற்றுத் திறனாளிகளுக்கும், பேச்சு பயிற்சிக்கு செல்லும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளி குழந்தை மற்றும் பாதுகாவலருக்கு என மொத்தம் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் இலவச பேருந்து பயண சலுகை அட்டைகளை வழங்கினார். இந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், மாவட்ட வழங்கல் (ம) நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் (பொ) சேகர், உதவி ஆணையர் (கலால்) பரமேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, முடநீக்கு வல்லுநர் ஆஷா மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.