ஆற்காடு : ஆற்காடு அருகே நள்ளிரவில் 3 கோயில்களில் அடுத்தடுத்து திருட்டு நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த சாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட களர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் மாரியம்மன் மற்றும் கங்கையம்மன் கோயில்கள் உள்ளது. அதேபோல், இதன் அருகே ஊர் கோயிலான கைலாசநாதர் கோயிலும் உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் 3 கோயில்களிலும் பூஜை முடிந்து அர்ச்சகர்கள் பூட்டி விட்டு சென்றனர். தொடர்ந்து, நேற்று காலை இந்த கோயில்கள் வழியாக சென்ற பொதுமக்கள் 3 கோயில்களின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அதில், நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் 3 கோயில்களின் பூட்டுகளையும் அடுத்தடுத்து உடைத்து உள்ளே புகுந்து அம்மன் தாலிகள் மற்றும் உண்டியல்களை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, கோயில்களில் கைவரிசை காட்டி தப்பிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர். ஒரே கிராமத்தில் அடுத்தடுத்த 3 கோயில்களின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.