மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 9ஆவது சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் பிரபல அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டில் வெற்றி பெரும் வீரர்களுக்கு ஏராளமான கார் உள்ளிட்ட பரிசு பொருட்களும் வழங்கப்படுகிறது. இதனையொட்டி ஏராளமான மக்கள் ஜல்லிக்கட்டு போட்டியை ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 8 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் 9ஆவது சுற்றில் காளைகள், காளையர் களமிறங்கியுள்ளனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 8ஆம் சுற்று முடிவில் 656 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த வீரர் கார்த்தி 16 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியில் வீரர் கார்த்தி 2ஆம் இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவனியாபுரத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் ரஞ்சித் 14 காளைகளை அடக்கி 2ஆவது இடத்தில் உள்ளார்.
தேனி சீலையம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் முத்துகிருஷ்ணன் 7 காளைகளை அடக்கி 3ஆம் இடம் பிடித்துள்ளார். சிவகங்கையைச் சேர்ந்த மாடுபிடி வீரர் முரளிதரன் 8ஆவது சுற்றில் 6 காளைகளை அடக்கியுள்ளார். தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியின் 9 வது சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் போலி டோக்கன் மூலம் கொண்டு வரப்பட்ட 21 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.