கும்பகோணம் : தஞ்சாவூர் அருகே 10ம் வகுப்பு மாணவியை கொன்று வாலிபர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே செம்மங்குடி ஊராட்சி, வண்டுவாஞ்சேரி கிராமம், காமராஜர் காலனியை சேர்ந்த மதியழகன் மகன் திலீபன் (20). விவசாய கூலித்தொழிலாளியான இவர், அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படித்து வந்த 16 வயது சிறுமியை ஓராண்டுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளார்.
இவர்களது காதலை அறிந்த திலீபனின் தந்தை மதியழகன் மகனை கண்டித்துள்ளார். இதனை மீறியும் இருவரும் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர்.இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில் அருகேயுள்ள திடலுக்கு அந்த சிறுமியை திலீபன் தனியாக வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து சிறுமியும் அங்கு சென்றுள்ளார்.
பின்னர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு சிறுமி வரவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர், அந்த திடலுக்கு சென்று பார்த்தபோது அங்கு சிறுமி மர்மமான முறையில் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். அந்த இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு மரத்தில் திலீபன் தூக்கிட்ட நிலையில் தொங்கியது தெரிய வந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கத்தி கூச்சலிட்டார். பின்னர் கிராம மக்கள் உதவியுடன் இருவரையும் மீட்டு நாச்சியார் கோயில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த நாச்சியார்கோயில் இன்ஸ்பெக்டர் சுகுனா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
பின்னர் போலீசார் அங்கிருந்த இருவரது உடைமைகளையும் கைப்பற்றினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபற்றி போலீசார் கூறுகையில், மர்மமான முறையில் இறந்து கிடந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? அல்லது மாணவியை கொன்று திலீபன் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் தான் முழுவிவரம் தெரியவரக்கூடும் என்றனர்.