சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்த 3 காட்டு யானைகளை விவசாயிகள் மற்றும் வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலை பகுதியில் காட்டு யானைகள் தினமும் கிராமங்களில் புகுந்து விளை நிலத்தில் உள்ள பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இன்று அதிகாலை தாளவாடி மலைப்பகுதியில் உள்ள திகினாரை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் ரங்கசாமி கோயில் பகுதியில் உள்ள செல்வகுமார் மற்றும் தாமு ஆகியோரது விவசாய நிலங்களுக்குள் புகுந்தன.
யானைகள் நடமாட்டத்தை கண்டு அச்சமடைந்த அப்பகுதி விவசாயிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் விவசாயிகள் உதவியுடன் ஜீப் மற்றும் டிராக்டர் பயன்படுத்தி 3 காட்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி யானைகளை அருகே உள்ள வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். காட்டு யானைகள் ஊருக்குள் நுழையாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாளவாடி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.