பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் நேற்று நடந்த வார சந்தையின்போது, ஆடு விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இதனை வாங்க வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்ததுடன், கூடுதல் விலைக்கு போனது. பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டின் ஒரு பகுதியில், வியாழக்கிழமை தோறும் வார சந்தை நடக்கிறது. இதில், மாட்டு சந்தை கூடும்போது, அதன் அருகேயே ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. ஆடுகளை வாங்க உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் அதிகம் வருகின்றனர்.
கடந்த சில வாரமாக ஆடு வரத்து குறைவாக இருந்ததுடன், விற்பனை மந்தமாகி குறைவான விலைக்கு விற்பனையானது. இந்நிலையில், தைப்பூச விழா உள்ளிட்ட கோயில் விசேஷ நாட்கள் நிறைவால் நேற்று நடந்த சந்தை நாளில் ஆனைமலை, கோட்டூர், நெகமம், வேட்டைக்காரன்புதூர், கோமங்கலம், வடக்கிபாளையம், உடுமலை உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வெள்ளாடு மற்றும் செம்மரியாடு உள்ளிட்டவை விற்பனைக்காக அதிகளவு கொண்டு வரப்பட்டது.
ஆடுகளை வாங்க சுற்றுவட்டார பகுதி வியாபாரிகள் மட்டுமின்றி, கேரள மாநில பகுதியிலிருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர். இக்கூட்டம் அதிகமாக இருந்ததால், சந்தை பரபரப்புடன் காணப்பட்டது. இதில் சுமார் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு 7,500 வரையிலும், 20 கிலோ வரையிலான எடை கொண்ட பெரியளவு ஆடு ஒன்று ரூ.18 ஆயிரத்து 500 வரையிலும் என தரத்திற்கேற்ப விலைபோனது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.